கோலாலம்பூரில் உள்ள பிரபல கடைத்தொகுதியின் முன்னால் 13 மோட்டார்சைக்கிள்களும் 4 மின்ஸ்கூட்டர்களும் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் ‘சூரியா கேஎல்சிசி’ கடைத்தொகுதிக்கு வெளியே நடைபெற்றதாக பெர்னாமா கூறியது.
தீ மளமளவென்று பரவியதில் 9 மோட்டார்சைக்கிள்களும் 4 மின்ஸ்கூட்டர்களும் முழுமையாக எரிந்து எலும்புக்கூடாகக் கிடந்தன. மேலும் 3 மோட்டார்சைக்கிள்கள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டன.
இரு தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும் 15 தீயணைப்பாளர்களும் விரைந்து சென்று மாலை 4 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார். இருப்பினும், யாருக்கும் காயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட ஆடவர் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) வரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதற்காக அவர் வாகனங்களைக் கொளுத்தினார் என்பது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் டாங் வாங் மாவட்டக் காவல்துறை துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வேண்டுமென்றே தீ மூட்டும் குற்றத்துக்கு மலேசியாவில் அதிகபட்சம் 14 ஆண்டு சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.