சிங்கப்பூர் முழுவதும் மூன்றாண்டுகளில் 540,000 மரங்கள் அறிமுகம்
நாடு முழுவதும் ஒரு மில்லியன் மரங்களை நடுவதற்காக வகுக்கப்பட்ட இலக்கை மூன்றாண்டுக்கு முன்னரே சிங்கப்பூர் எட்டிவிடுவதுபோலத் தோன்றுகிறது.
‘ஒருமில்லியன் மரங்கள்’ இயக்கம் 2020 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டதுமுதல் இதுவரை அந்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதியளவு, அதாவது 540,000 மரங்கள் குடியரசு முழுவதும் ஆங்காங்கே நடப்பட்டுவிட்டன.
2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மரங்களை நடவேண்டும் என்பது இந்த இயக்கத்தின் இலக்கு. ஆனால், தற்போதைய சூழலில் 2027ஆம் ஆண்டே அந்த இலக்கை எட்டிவிடும் நிலை உள்ளதாக தேசிய பூங்காக் கழகம் நேற்று கூறியது.
சாலை ஓரங்கள், ஜூலை தீவு மற்றும் இதர தொழிலியல் பேட்டைகள் ஆகிய இடங்களோடு இயற்கை வனப் பாதுகாப்பு மற்றும் தோட்டங்களிலும் மரங்கள் நடப்பட்டதாக அது தெரிவித்தது.
மேலும், சுங்கை பூலோ சதுப்புநில இயற்கைவளப் பாதுகாப்பிடம், ஜூரோங் லேக் தோட்டங்கள். புலாவ் உபின், பாசிர் ரிஸ் பூங்கா, தெலுக் பிளாங்கா மலைத் தோட்டம் போன்றவற்றிலும் மரங்கள் நடப்பட்டதாக கழகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
“மரம் நடும் முயற்சிக்கு சமூகத்தைச் சேர்ந்த 75,000க்கும் மேற்பட்டோர் கைகொடுத்தனர். ‘பிளாண்ட்-எ-ட்ரீ’ என்னும் திட்டத்தில் பெருநிறுவனங்களும் இதர அமைப்புகளும் மரங்களை நட தங்களது பங்கை அளித்தன,” என்றது கழகம்.
சிங்கப்பூரின் பசுமைப் பயணம் 1963 ஜூன் 16ஆம் தேதி தொடங்கியதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் இயூ அவர்கள் அந்தத் தேதியில்தான் நாடளாவிய மரம் நடும் பிரசாரத்தைத் தொடங்கிவைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிய ஒரு சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் ‘மரம் நடும் நாள்’ கடைப்பிடிக்கப்படுவதை அவர் வழக்கமாக்கினார். தீவு முழுவதும் மரங்களை நட மக்கள் முன்வருவதற்காக அந்தக் கலாசாரம் பின்பற்றப்பட்டது. நாமும் அதனைத் தொடர்வதோடு வருங்காலத்திலும் இந்த முயற்சி நீடிக்க வேண்டும்,” என்று திரு லீ கூறினார்.
நாடளாவிய மரம் நடும் பிரசாரம் தொடங்கப்பட்ட 60 ஆண்டைக் குறிக்க நேற்று சிங்கப்பூர் பூமலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று அவர் பேசினார்.
“இப்படி ஓர் இயக்கம் தொடங்கப்படாமல் இருந்திருந்தால் வெறும் கான்கிரீட் கற்களும் இரும்புக் கம்பிகளும் நிறைந்த நாடாக சிங்கப்பூர் எளிதில் மாறி இருக்கும். காரணம் அந்தக் காலத்தில் அதற்கான தேவை இருந்தது. கான்கிரீட் கற்களும் இரும்புக் கம்பிகளும் போதுமான அளவுக்குக் கிடைத்தன. இருப்பினும் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நற்செயலால் உலகின் பசுமை நிறைந்த நகரங்களில் ஒன்றாக தற்போது சிங்கப்பூர் திகழ்கிறது.
“நமது நகரின் முக்கிய இடங்களில் இயற்கை வளம் கொழிக்கிறது. இயற்கைவளப் பாதுகாப்புப் பகுதிகளும் பசுமைச் சூழலைத் தொடர்கின்றன. நமது தீவு முழுவதும் பூங்காக்களும் பசுமை நிறைந்த பொதுவெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன.
“ஒரு மில்லியன் மரங்கள் என்னும் இயக்கம் வெறும் எண்ணிக்கை அடிப் படையிலானது மட்டுமல்ல. மரங்கள் நிழலையும் குளுமையான சூழலையும் தருவதோடு காற்றின் தரத்தையும் மேம்படுத்துகின்றன. கரிமத்தைப் பிரித்து பருவநிலை மாற்றத் தணிப்புக்குக் கைகொடுக்கின்றன,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் 60 ஆண்டு பசுமைப் பயணத்தைக் குறிக்கும் வகையில் பூமலையில் நேற்று 60 மரங்கள் நடப்பட்டன. பசுமைப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தபோது திரு லீ குவான் இயூ பயன்படுத்திய ‘மெம்பாட்’ மரமும் நேற்று நடப்பட்டது.