ஆணவக் கொலை செய்தவர் தப்பி ஓட்டம்
வேறு சாதிப் பெண்ணை காதல் திருமணம் செய்ததற்காக கிருஷ்ணகிரியில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளன. காதல் மணம் புரிந்த பெண் உயிர் பிழைக்கப் போராடுகிறார்.
இந்த ஆணவக் கொலைகள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி, 48, என்பவரை காவல்துறை தேடி வருகிறது. இவரது மகன் சுபாஷ், 25, திருப்பூரில் ஒரு பனியன் தயாரிப்புத் தொழிற்சாலையில் வேலை செய்தார்.
அப்போது தம்முடன் வேலை செய்த அனுசுயா, 23, என்பவரை அவர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இருவரும் கடந்த (மார்ச்) மாதம் 27ஆம் தேதி ரகசியத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள், 65, புதுமணத் தம்பதியரை அருணபதி கிராமத்திற்கு அழைத்திருந்தார். மகிழ்ச்சியுடன் பாட்டி வீட்டுக்குச் சென்ற சுபாஷும் அவரது மனைவியும் புத்தாண்டைக் கொண்டாடிய பின்னர் அங்கேயே தங்கிவிட்டனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த தண்டபாணி, நேற்று அதிகாலை தமது அம்மாவின் வீட்டுக்குச் சென்று மகன் சுபாஷையும் அவரது மனைவி அனுசுயாவையும் சரமாரியாக வெட்டினார். தாக்குதலைத் தடுக்க முயன்ற கண்ணம்மாளையும் தாய் என்றும் பாராது கண்மூடித்தனமாக வெட்டினார். பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த மூவரையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சுபாஷும் கண்ணம்மாளும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். படுகாயமடைந்த அனுசுயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவரங்களை சேலம் வட்டார காவல்துறை தலைமை அதிகாரி எஸ் ராஜேஸ்வரி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் கூறினார். ஊத்தங்கரை கீழ்நீதிமன்ற நீதிபதி ஜி. அமர் ஆனந்த், நேற்று பிற்பகல் மருத்துவமனைக்குச் சென்று அனுசுயாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். கொடூரக் கொலைச் சம்பவத்தால் பதற்றத்தில் உறைந்துள்ள அருணபதி கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.