சிங்கப்பூர் கடந்த பல ஆண்டுகளாக அனைத்துலக ரீதியில் வலுவானதொரு நற்பெயரைப் பெற்றுவருகிறது.
மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் நாட்டுத் தலைவர்கள் பெற்றிருக்கும் அதேவேளை தங்களின் வாக்குறுதிகளை அத்தலைவர்கள் நிறைவேற்றியும் வருகின்றனர் என மக்கள் அறிந்திருப்பது இதற்குக் காரணம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இதனால் நல்ல முதலீடுகளை நாடு ஈர்த்துள்ளதுடன் உலகின் ஆக உயர்ந்த வாழ்க்கைத்தரங்களில் ஒன்றினை சிங்கப்பூரர்கள் அனுபவிக்க முடிவதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.
இருப்பினும், சிங்கப்பூருக்குரிய இந்த அடையாளத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருளியல் வலுவாக இருப்பது, அமைப்புமுறைகள் நடப்பில் இருப்பது, மக்கள் ஒற்றுமையாக இருப்பது, இருப்புகள் நன்கு நிர்வகிக்கப்பட்டு கட்டிக்காக்கப்படுவது ஆகிய அம்சங்கள்வழி நாடு சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்தலாம் என்றார் அவர்.
இவை யாவும் அமைந்திட திறன்வாய்ந்த, அர்ப்பணிப்புமிக்க, நம்பகமான
வகையில் தலைவர்கள் இருப்பது முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறை தலைத்துவக் குழுவுக்கும் அதன் தலைவரும் துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங்குக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்குமாறு தொடர்ந்து திரு லீ அறைகூவல் விடுத்தார்.
உக்ரேன் போர், மோசமடைந்துவரும் அமெரிக்க சீனா உறவு, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் உலக வர்த்தக அமைப்புமுறை போன்றவற்றால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து சுட்டிய பிரதமர் லீ, இவ்வாறு நாளுக்கு நாள் ஆபத்து அதிகரித்தவண்ணம் அமைந்த உலகை சிங்கப்பூர் நன்முறையில் கையாள்வதற்கு நாட்டு அரசாங்கத்தின் தரம் ஒரு முக்கிய அம்சம் என்றார்.
சிங்கப்பூர் அமைப்புமுறை நன்கு செயல்படுவதை மக்கள் அறிந்திருப்பதால் காலப்போக்கில் சிங்கப்பூர் நல்ல பெயரையும் நிலையையும் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
கொவிட்-19 கொள்ளைநோயை அரசாங்கம் கையாண்ட விதம், மேலும் சான்று பகர்வதாக அவர் கூறி, கிருமி நெருக்கடியைச் சமாளிப்பதில் 4ஜி குழு முக்கிய அங்கம் வகித்ததைக் குறிப்பிட்டார்.
வலுவான தலைமைத்துவத்தால் மக்கள் மீள்திறனுடன் செயல்பட்டனர் என்றும் பொதுத் துறை தலைசிறந்த முறையில் பங்காற்றினர் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் தான் கொண்டுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதுடன் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டும் வருகிறது என்றார் பிரதமர் லீ.
தேர்தலுக்குத் தேர்தல் கொள்கைகள் மீட்கப்படுவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக விவகாரங்கள் குறித்து சிங்கப்பூரர்கள் பயனுள்ள பங்களிப்புகளை ஆற்றியுள்ளது தொடர்பிலும் அவர் பேசினார்.
தண்ணீர் ஆளுமைக்கான அனைத்துலக ஆணையத்தின் தலைவர்களுள் ஒருவராக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இருப்பதை இதற்கு உதாரணங்காட்டினார்.
நாட்டின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் நாளுக்கு நாள் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில் 4ஜி தலைவர்கள் உள்ளதாகக் கூறிய அவர், நாடளவிலும் அனைத்துலக அளவிலும் நிறைவேற்ற 4ஜி குழுவுக்கு உறுதியான திட்டங்கள் உள்ளன என்றார்.
இருப்பினும் அக்குழு தனித்துச் செயல்படமுடியாது என்பதைச் சுட்டிய அவர், இத்திட்டங்கள் நிறைவேற மக்களின் ஆதரவைக் கோரினார்.
“நம்மை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள் என நீங்கள் நம்புவோரை தலைவர்களாகத் தேர்ந்தெடுங்கள்,” என்று புதன்கிழமையன்று (19 ஏப்ரல்) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் அறிவுறுத்தினார் பிரதமர் லீ.