இந்தியா இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள்தொகையில் சீனாவை விஞ்சிவிடும்.
இந்த ஆண்டின் நடுப்பகுதி வாக்கில் சீனாவைவிட இந்தியாவில் கிட்டத்தட்ட 3 மில்லியன் அதிக மக்கள் வாழ்வார்கள் என்று ஐக்கிய நாட்டு (ஐநா) நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா மக்கள்தொகை நிதியம் அமைப்பு தன்னுடைய உலக மக்கள்தொகை அறிக்கை 2023ஐ வெளியிட்டிருக்கிறது.
அதன்படி இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் 1,428.6 மில்லியன் அல்லது 1.4286 பில்லியன் (142.86 கோடி) மக்கள் வசிப்பார்கள்.
சீனாவின் மக்கள்தொகை 1.4257 பில்லியனாக இருக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மக்கள்தொகையைப் பொறுத்தவரை அமெரிக்கா மூன்றாவது இடத்தில் இருக்கும்.
அந்நாட்டில் 340 மில்லியன் பேர் வாழ்வார்கள் என்பது கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியா இந்த மாதம் சீனாவை கடந்துவிடும் என்று ஏற்கெனவே ஐநா மதிப்பீடுகள் தெரிவித்திருக்கின்றன.
இருந்தாலும் அந்த மாற்றம் எந்தத் தேதியில் இடம்பெறும் என்பதை இப்போதைய ஆகப் புதிய அறிக்கை தெரியப்படுத்தவில்லை.
இந்தியா, சீனா இரு நாடுகளில் இருந்தும் வெளிவரும் புள்ளிவிவரங்கள் நிச்சயமில்லாமல் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட தேதியை வரையறுத்துச் சொல்வது சாத்தியமற்றது என்று ஐநா மக்கள்தொகை பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கடைசியாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து 2021ஆம் ஆண்டு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்திருக்கவேண்டும்.
ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக அது தாமதமடைந்தது.
உலகில் மொத்தம் 8.045 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சீனாவிலும் இந்தியாவிலும் வசிப்பவர்கள்.
என்றாலும் சீனாவிலும் இந்தியாவிலும் மக்கள்தொகை வளர்ச்சி மெதுவடைந்து வருகிறது.
இந்தியாவைவிட சீனாவில் அந்த வளர்ச்சி குறைவாக இருக்கிறது.