வடகொரியாவின் வேவு செயற்கைக்கோள் ஜப்பானின் எல்லைக்குள் வந்தால் அதைச் சுட்டு அழிக்கத் தயாராகும்படி ஜப்பானின் தற்காப்புப் படைக்கு அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் யாசுகாசு ஹாமாடா உத்தரவிட்டுள்ளார். வெடிகுண்டு ஏவுகணை விழுந்தால் அதன் பாதிப்புகளைக் குறைக்க, ஒக்கினாவா நகரின் தெற்குப் பகுதிக்கு படைகளை நகர்த்துவது ஆயத்தங்களில் ஒன்று.
அமரிக்கா, தென்கொரியா நாடுகளிலிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வண்ணம் வடகொரியா அதன் முதல் வேவு செயற்கைக்கோளைப் பாய்ச்சும் திட்டம் தொடரவேண்டும் என்று வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் கூறியதாக அந்நாட்டு ஊடகம் புதன்கிழமை கூறியது. செயற்கைக்கோளைச் செலுத்த நீண்ட தூர எறிகணை தேவை. எறிகணையைப் பாய்ச்ச வடகொரியாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2012லும் 2016லும் வடகொரியா செயற்கைக்கோள் பாய்ச்சல் என்ற பெயரில் வெடிகுண்டு ஏவுகணைகளைப் பயிற்சி செய்து பார்த்ததும் அந்த இரு ஏவுகணைகளும் ஒக்கினாவா நகரைத் தாண்டி பறந்ததும் குறிப்பிடத்தக்கது.