கருணாநிதி துர்கா
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இந்த ஆண்டு உச்சதேர்ச்சி பெற்று, லீ குவான் இயூ விருது வென்ற நான்கு மாணவர்களில் 20 வயது சதீஷ் குமார் கண்ணனும் (படம்) ஒருவர். பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொழில்நுட்பம், கணினி அறிவியல் துறைகளில் தலைசிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு லீ குவான் இயூ கணிதம், அறிவியல் விருது வழங்கப்படுகிறது.
பலதுறைக்கல்லூரி பட்டயப் படிப்பில் ஒருவர் பெறக்கூடிய அதிகபட்சமான நான்கு புள்ளிகளை (ஜிபிஏ) பெற்று இருக்கும் சதீஷ், சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு முதுநிலைப் பட்டம் பயிலவுள்ளார்.
லீ குவான் இயூ விருது சதீஷின் பெருங்கனவு. ஈராண்டுக்கு முன்பிருந்தே அதற்குக் குறிவைத்துக் கடுமையாக உழைத்தார் இவர்.
சிறுவயதில் குடும்பப் பிரச்சினையால் படிப்பு பாதிக்கப்பட, தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைந்து வழக்கநிலைக்குச் சென்றார் சதீஷ். அப்போது அவரின் அம்மா அவரிடம் வீட்டுச் சூழலையும் படிப்பையும் பிரித்துப் பார்க்கும்படி கூறினார்; அவர் படிப்பதற்கு வீட்டில் அமைதியான சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
வழக்கநிலைத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்று, பலதுறைத் தொழில் கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார் சதீஷ்.
அச்சமயத்தில் அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட, குடும்பப் பொறுப்புகளையும் சதீஷ் ஏற்கும் நிலை வந்தது.
கடின உழைப்பாலும் சிறப்பான தேர்ச்சியினாலும் கிடைத்த தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் உபகாரச் சம்பளம் இவரது படிப்புச் செலவுக்குப் பெரிதும் கைகொடுத்தது.
தன்னைப்போல் பிரச்சினை உள்ள, வசதிகுறைந்தோருக்கு உதவும் நோக்கத்தில பொதுச் சேவையிலும் சதீஷ் ஈடுபடத் தொடங்கினார். ‘ஹாவ் ரென் ஹாவ் ஷி’ என்ற லாப நோக்கமில்லா அமைப்புடன் சேர்ந்து இவர் தொண்டூழியம் புரிந்து வருகிறார்.
தனது வெற்றிக்கு தன் அம்மாவே காரணம் என்ற சதீஷ், “எத்தனை சிக்கல்களைச் சந்தித்தாலும் அதை அவர் என்னிடம் காட்டிக்கொண்டதில்லை. அவரே எனக்கு உறுதுணை,” என்றார்.
ரொபோட்டிக்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்று இலக்கு கொண்டுள்ள சதீஷ். எலும்பு அசைவுக்குத் துணை புரியும் கருவி குறித்த ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளவுள்ளார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்