இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற சிறு விவசாயி, நாள்தோறும் பயந்து பயந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரி ஒருவர் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வருகிறார்.
பாலகிருஷ்ணனுக்கு ஓர் ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆடுகளையும் வளர்த்து வருகிறார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை தலைவிரித்தாடுகிறது என்றும் இரவு நேரங்களில் தன்னுடைய கிராமம் உள்ளிட்ட தாமிரபரணி வட்டார கிராமங்களில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது என்றும் கூறி 200க்கும் மேற்பட்ட புகார்களை அதிகாரிகளிடம் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்து இருக்கிறார்.
ஆனால், இதுவரையில் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வல்லநாடு ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் இருக்கும் திரு பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
காவல்துறையிடம் தான் தெரிவிக்கும் புகார் தகவல்கள் உடனுக்குடன் கடத்தல்காரர்களுக்குச் சென்றுவிடுவதாகக் கூறும் இவர், சட்டவிரோத செயல்களுக்குச் சில அதிகாரிகளும் துணை போவதாகக் கூறுகிறார்.
மணல் கொள்ளையர்களுக்கு எதிராக புகார் தெரிவித்ததால் ஏராளமான கொலை மிரட்டல் தனக்கு வந்ததாகக் கூறி மதுரை நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் வழக்குத் தொடுத்தார்.
பாலகிருஷ்ணனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கடந்த 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
“அது முதல் நான் அன்றாடம் வயலுக்குச் சென்றாலும் காவலர் உடன்தான் செல்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை ஒழிய வேண்டும்.
“நானும் என் போன்ற பொதுமக்களும் சுதந்திரமாக நடமாட வேண்டும்,” என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த விவசாயி தொடுத்த வழக்குகளில் சிலவற்றை சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரித்து வருகிறார்கள்.
இவருடைய சொந்த ஊரான முறப்பநாடுக்கு அருகே உள்ள அகரம் என்ற கிராமத்தில் சில நாள்களுக்கு முன் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அதிகாரியை மணல் கடத்தல்காரர்கள் அவருடைய அலுவலகத்திலேயே வெட்டிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பாலகிருஷ்ணன் மேலும் பயத்தில் வாழ்கிறார்.