ஆபத்து நிறைந்த, சிரமமான காலகட்டத்திற்கேற்ப சிங்கப்பூர் தன்னை சரிசெய்துகொள்ளும் வேளையில் சிங்கப்பூர் ஆயுதப் படை வலுவுடனும் நம்பிக்கையுடனும் திகழ்வது அவசியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரின் குரலுக்கு வலு சேர்ப்பது சிங்கப்பூர் ஆயுதப் படையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் அதன் நலன்களைக் காக்க உறுதியுடன் நீடிப்பதிலும் நாட்டை பாதுகாப்பானதாக வைத்திருப்பதிலும் சிங்கப்பூர் ஆயுதப் படை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் திரு வோங் தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரிகள் பதவி ஏற்பு அணிவகுப்பில் நேற்று கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். ஜூரோங்கில் உள்ள சாஃப்டி ராணுவப் பயிலகத் தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
“உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்திருப்பதாலும் அமெரிக்கா, சீனா இடையிலான உறவில் பதற்றம் நிலவுவதாலும் உலகம் பெரிய மாற்றத்தையும் நிச்சயமற்ற நிலையையும் சந்திக்கிறது. மற்றொரு புறம் பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம், இணையத் தாக்குதல்கள் போன்ற அச்சுறுத்தல்களும் உள்ளன.
“ஆசியாவை எடுத்துக்கொண்டால், தைவானியப் பிரச்சினையும் தென்சீனக் கடல் பிரச்சினையும் அதிக ஆபத்தானவையாக விளங்குகின்றன. இந்த அம்சங்களில் தப்புக் கணக்குப் போடுவதற்கான இடர்ப்பாடுகளும் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
“வியட்நாம் போர் முடிவுக்கு வந்ததிலிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக ஆசியா அமைதியையும் நிலைத்தன்மையையும் அனுபவித்து வந்துள்ளது. தற்போது நிலைமை வேறுபடுவதை எண்ணிப் பார்க்கக்கூட கடினமாக உள்ளது.
“நிலைமை எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானாலும் தவறாக மாறலாம், மோதல்கள் உருவாகலாம் என்பதை ஐரோப்பிய அனுபவம் உணர்த்துகிறது. ஆசியாவில்கூட போர் போன்ற சூழல் நிகழ்வதை நம்மால் மறுக்க இயலாது,” என்று திரு வோங் தமது உரையில் குறிப்பிட்டார்.