வாஷிங்டன்: முக்கிய வழக்காகக் கருதப்படும் ஒரு சச்சரவில், அமெரிக்காவிலுள்ள 5,000 பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து பிரபல ‘டிக்டாக்’ சமூக ஊடகத் தளத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
‘மின்னிலக்கமயத்தின் பெரும் புகையிலை’ என்று தளத்தை அவர்கள் குறிப்பிடுவதுடன் டிக்டாக் செயலி, ‘அமெரிக்க இளையரை அழிக்கிறது’ என்றும் கூறியுள்ளனர்.
பதின்ம வயதினரின் மனநலத்தின் மீது டிக்டாக் தளம் கொண்டுள்ள தாக்கம் குறித்து பெற்றோர் பலர் கவலை தெரிவித்து வருவதற்கு இடையே, இந்த வழக்கு அவர்களது கவனத்தை ஈர்த்துவருகிறது.
இந்தத் தாக்கத்திற்கு டிக்டாக் தளத்தை உருவாக்கிய சீன நிறுவனமான ‘பைட்டான்ஸ்’, பொறுப்பேற்க வேண்டும் என்று பெற்றோர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தத் தூண்டும் இயல்பால், டிக்டாக் செயலி கணிசமான தீங்கை இழைப்பதாக வழக்கை முன்னெடுத்துள்ள கெல்வின் கூட் குறிப்பிட்டார்.
உயிரை மாய்த்துக்கொள்ளுதல் போன்ற தீங்கிழைக்கும் பதிவுகளின் மூலம் இளையரிடையே தளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, டிக்டாக் தளத்திற்குப் பெற்றோர் கடுமையாகக் கண்டனம் தெரிவிப்பது குறித்தும் நிபுணர்கள் எச்சரிக்கை காக்க அறிவுறுத்தியுள்ளனர்.
நல்வாழ்வை ஊக்குவித்தல் போன்ற பலனை டிக்டாக் பயனாளர்கள் பெறலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.