பெய்ஜிங்: தைவானில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கும் வேட்பாளரால் தைவான் - சீனா உறவுக்குப் பெரிய ஆபத்து ஏற்படும் எனச் சீனா வியாழக்கிழமை தெரிவித்தது.
அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் சீனா இவ்வாறு கூறி இருப்பது தைவான் வாக்காளர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவானின் அதிபர் தேர்தலை சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.
ஏனெனில், இத்தேர்தலின் முடிவு அந்நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான எதிர்கால உறவை பாதிக்கும் என அவர்கள் எண்ணுகின்றனர்.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. ஒரு நாள் அதைத் தன்னோடு இணைத்துகொள்ள அது உறுதிகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானில் தற்போது நிலவும் அரசியல் நிலவரப்படி, ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் அதிபர் வேட்பாளரான லாய் சிங்-தேயை அந்நாட்டு வாக்காளர்கள் ஆதரிப்பதாக கூறப்படுகிறது.