சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்குப் பகுதியில் உள்ள கடற்கரை ஒன்றில் பொட்டலம் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு ஆஸ்திரேலியக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைச் சோதனை செய்து பார்த்தபோது அதில் 39 கிலோ கொக்கேன் எனும் போதைப்பொருள் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் சுற்றப்பட்டிருப்பதை அந்நாட்டுக் காவல்துறை கண்டறிந்தது.
அதற்குப் பிறகு கடந்த நான்கு வாரங்களில், சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரைகளிலிருந்து அலைச்சறுக்கு வீரர்கள், நீச்சல் வீரர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் இதே போன்ற பொட்டலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
“நியூ சவுத் வேல்ஸ் கடற்கரைகளில் கண்டெடுக்கப்பட்ட ‘கொக்கைன்’ பொட்டலங்கள் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்” என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் பேச்சாளர் கூறினார்.
இவை போன்ற போதைப்பொருள் கொண்ட பொட்டலங்களைக் கைப்பற்ற, நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தங்களுடைய போல்ஏர் எனப்படும் புலனாய்வாளர்களுடன், ஆஸ்திரேலிய எல்லைப் படை, சர்ஃப் லைஃப் சேவிங் (நியூ சவுத் வேல்ஸ்) என்ற சிறப்புப் பிரிவுகளுடனும் இணைந்து பணியாற்றி வருவதாக பேச்சாளர் தெரிவித்தார்.
இதுவரை, இந்தப் போதைப்பொருள்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்துத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பொட்டலங்களில் காணப்படும் முத்திரைகளைக் கொண்டு அதை அடையாளம் காண அதிகாரிகள் முயன்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொட்டலங்களைச் சோதிக்கவும் எப்பொழுது கடலுக்குள் எறியப்பட்டது என்பதை ஆராயவும் கடல்சார் நிபுணர்களை நியமித்துள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.