ராஃபா: போர் மூண்ட காஸாவில் மின்தடை வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால், கைப்பேசிகளில் பதிக்கப்பட்ட சிம் (இ-சிம்) அட்டை வசதியால் பாலஸ்தீனர்களால் இணையத்தைப் பயன்படுத்தவும் வெளிநாடுகளில் வசிக்கும் அன்புக்குரியவர்களுடன் தொடர்பை நிலைநாட்டவும் முடிகிறது.
காஸா நிலவரத்தை நேரலையாகக் காட்ட இ-சிம் அட்டைகளைச் சார்ந்திருக்கும் உள்ளூர் செய்தியாளர் ஹனி அல் ஷயிர், “அவையின்றி நாங்கள் உலகிலிருந்து துண்டிக்கப்படுவோம். காஸாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி எவருக்கும் தெரியாது,” என்று கூறினார்.
இ-சிம் அட்டைக்குப் பின்னால் உள்ள யோசனை எளிதானது. அவை, கைப்பேசி கட்டமைப்புகள் மற்றும் இணையச் சேவையுடன் இணைக்க பாரம்பரியமாக கைப்பேசிகளில் செருகப்படும் சில்லுகளின் மென்பொருள் பதிப்பாகும்.
கைப்பேசிக்குள் நேரடியாகப் பதிக்கப்பட்ட இ-சிம் அட்டைகள், கியூஆர் குறியீட்டைக் கொண்டு இயக்கி, பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து காஸா மக்களுக்கு அந்த கியூஆர் குறியீடு அனுப்பபி வைக்கப்படுகிறது.
காஸா குடியிருப்பாளர்கள் ஒரு வெளிநாட்டு கட்டமைப்புடன் ‘ரோமிங்’ முறையில் இணைக்க முடியும். அது பெரும்பாலும் இஸ்ரேலிய அல்லது சில நேரங்களில் எகிப்திய கட்டமைப்பாக இருக்கும்.
இ-சிம் அட்டை கடவுள் அனுப்பிய வரம் என்றார் திருவாட்டி சமர் லபாட், 38.
காஸா சிட்டியில் உள்ள தமது வீட்டிலிருந்து தெற்குப் பகுதிக்கு அவர் இடம்பெயர்ந்தார்.
தற்போது ராஃபாவில் இருக்கும் அவர், ஒருவாரத்துக்கு மேலாக தம் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்தார். ஆனால், பெல்ஜியத்தில் வசிக்கும் அவருடைய சகோதரர், அவருக்கு இ-சிம் அட்டையை அனுப்பிவைத்தார்.
“இணைப்பு சீராக இல்லை. ஆனாலும் அது வேலை செய்கிறது. இதைக் கொண்டு எங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்க முடிவதே எனக்குப் போதுமானது,” என்றார் திருவாட்டி சமர்.
கைப்பேசிக் கடை உரிமையாளரான திரு இப்ராகிம் முகைமர், தமது பிரதான வாடிக்கையாளர்கள் செய்தியாளர்களே என்றார். வெளியுலகிற்கு காஸாவின் உண்மை நிலவரத்தை எடுத்துச்சொல்ல செய்தியாளர்கள் இ-சிம் அட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உதவ மருத்துவர்களும் குடிமைத் தற்காப்புப் படையினரும் தமது இ-சிம் வாடிக்கையாளர்களில் அடங்குவர் என்றார் திரு இப்ராகிம்.