கோலாலம்பூர்: முதலில் மே 2ஆம் தேதி திரங்கானு காற்பந்துக் குழு விளையாட்டாளர் அக்யார் ரஷிட், தமது வீட்டுக்கு வெளியில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் காயமடைந்தார்.
மூன்று நாள்களுக்குப் பிறகு கோலாலம்பூரின் பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் உள்ள கடைத்தொகுதியில் இருந்தபோது சிலாங்கூர் காற்பந்துக் குழு விளையாட்டாளரும் மலேசிய நட்சத்திரக் காற்பந்து ஆட்டக்காரருமான ஃபைசல் ஹலிம் மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆக அண்மையில் மே 7ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஜோகூர் டாருல் தக்சிம் ஆட்டக்காரர் சஃபிக் ரஹிமின் கார் கண்ணாடியை இரு ஆடவர்கள் உடைத்தனர்.
அந்த மூன்று சம்பவங்களும் மலேசியக் காற்பந்துத் துறையை ஆட்டங்காண வைத்துள்ளன. அதனால் காற்பந்துக் குழுக்கள் தங்கள் அதிகாரிகளின் பாதுகாப்பை வலுப்படுத்திவருகின்றன. தங்களின் ஆட்டக்காரர்களின் பாதுகாப்பு குறித்தும் அவை யோசித்துவருகின்றன.
அண்மைத் தாக்குதல்களினால், மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.