புதுடெல்லி: போலித் திருமணம் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கள்ளத்தனமாகக் குடியேற வழிவகை செய்த குற்றக் கும்பல் ஐரோப்பிய நாடான சைப்ரசில் முறியடிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அக்கும்பல் ஆட்கடத்தலிலும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. குடியேற்ற நோக்கங்களுக்காக போலியாகத் திருமணம் செய்துகொள்ள அவர்கள் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
“அவர்கள் லாட்வியா, போர்ச்சுகல் நாடுகளைச் சேர்ந்தோரைச் சைப்ரசுக்கு அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் அந்நாடுகளைச் சேர்ந்த பெண்களை வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் திருமணம் செய்தும் வைத்தனர்,” என்று ஐரோப்பியக் காவல்துறை (யூரோபோல்) ஓர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தது.
அந்தக் குற்றக் கும்பலில் இந்தியர், பாகிஸ்தானியர், போர்ச்சுகீசியர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறது. விமானப் பயணச்சீட்டு வாங்குவது, கடப்பிதழ் உட்பட தேவையான மற்ற ஆவணங்களைத் தயார்செய்வது போன்ற வேலைகளை அவர்களே மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களை பிப்ரவரி 7ஆம் தேதிவரை காவலில் வைக்க சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்களில் இருவர் லாட்வியா, போர்ச்சுகலிலும் மற்ற 13 பேரும் சைப்ரசிலும் பிடிபட்டதாக யூரோபோல் தெரிவித்தது.
ஒட்டுமொத்தத்தில், போர்ச்சுகீசிய, லாட்விய பெண்களை இந்திய, பாகிஸ்தானிய ஆடவர்களுக்கு மணமுடித்து வைத்த வகையில் 133 போலித் திருமணங்கள் இடம்பெற்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.