தோக்கியோ: பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யூஏ) அளிக்கப்படும் நிதியுதவியைத் தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளதாக ஜப்பான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) தெரிவித்தது.
ஹமாஸ் போராளிகள் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சில நாடுகள் கூறியதையடுத்து ஐக்கிய நாட்டு நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஜப்பான் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பின் ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை எண்ணி ஜப்பான் வருந்துகிறது,” என ஜப்பானிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.
“இது குறித்து யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பு விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்,” என ஜப்பான் அதில் குறிப்பிட்டது.
நிதியுதவி அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் முடிவை மாற்றிக்கொள்ளும்படி அந்த நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.