பில்லிங்ஸ், மாண்டெனா: அமெரிக்காவின் மாண்டெனா மாநிலத்தில் சனிக்கிழமை சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டதில் அதில் இருந்த குறைந்தது ஏழு பெட்டிகள் எலோஸ்டோன் ஆற்றில் விழுந்தன.
அந்த ரயில் ஏந்திச் சென்ற ரசாயனப் பொருள்கள் ஆற்றுநீரில் கொட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ரயில் முதலில் தடம்புரண்டதா அல்லது அது சென்றுகொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததா என்பது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், எவ்வளவு சரக்கு ஆற்றுநீரில் விழுந்தது என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ரயில் தடம்புரண்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
மொத்தம் 10 ரயில் பெட்டிகள் தடம்புரண்ட இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று அந்த ரயிலை இயக்கிய மொண்டானா ரயில் லிங்க் நிறுவனத்தின் பேச்சாளர் ஆண்டி கார்லண்ட் தெரிவித்தார்.
இந்நிலையில், ரயில் சென்ற பாலம் எப்போது கட்டப்பட்டது அல்லது கடைசியாக அது எப்போது பரிசோதிக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை.