கோலாலம்பூர்: இந்திய பாரம்பரியத் தொழில்களான சிகை அலங்காரம், ஜவுளி வணிகம், பொற்கொல்லர் துறைகளில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வரும் வெள்ளிக்கிழமை (செப். 8) அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் வி சிவகுமார் தெரிவித்துள்ளார்.
“மேல் விவரங்கள் இருந்தால், பின்னர் அறிவிக்கப்படும்,” என்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முன்னதாக, பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவுக்கு திங்கட்கிழமை வருகை அளித்த பிரதமர் அன்வார் இப்ராகிம் சிகை அலங்காரம், ஜவுளி வணிகம், பொற்கொல்லர் ஆகிய துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பெற அனுமதி வழங்கப்படும் என்று கூறினார்.
“முதலில் துறைக்கு தேவைப்படும் ஆட்பலத்தில் 50% ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். அதே நேரத்தில், உள்நாட்டவர்களுக்கும் பயிற்சி அளித்து இத்துறைகளுக்குத் தயார்ப்படுத்த வேண்டும்,” என்று அன்வார் கூறினார்.
இத்துறைகளில் தற்போதுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி அட்டைகள் மார்ச் 15 முதல் புதுப்பிக்கப்படாது என்றும் புதிய வேலை அனுமதி வழங்கப்படாது என்றும் மலேசிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.
இத்துறைகளில் புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த 2009ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்படவில்லை.