ஹங்ஸோ: சீனாவின் ஹங்ஸோ நகரமும் அங்குள்ள அழகான மேற்கு ஏரியும் னக் கவிஞர்களாலும் ஓவியர்களாலும் புகழ்பெற்றது. அது இப்போது19வது ஆசிய விளையாட்டுகளையும் ஏற்று நடத்தும் நகரமாக பிரம்மாண்ட முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஓர் ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்த ஆசிய விளையாட்டுகள், ஹங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் மிகவும் கோலாகலமாக சீன அதிபர் ஸி ஜின் பிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.
சீனப் பாரம்பரிய இலையுதிர் காலத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுத் திருவிழாவில் 45 நாடுகள், பிரதேசங்களிலிருந்து 12,500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த பத்து ஆசிய விளையாட்டுகளிலும் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த சீனாவைப் பிரதிநிதித்து இம்முறை 886 போட்டியாளர்கள் களம் இறங்குகின்றனர்.
அவர்களில் 36 ஒலிம்பிக் வெற்றியாளர்கள் உள்ளனர். நீச்சல் வீரர் ஸாங் யுஃபெய், மேசைப் பந்து விளையாட்டின் உலகில் முதல் தரவரிசையில் உள்ள ஃபான் ஸென்டோங், சென் மெங், பென் கோல்ஃப் வெற்றியாளர் யின் ருவோனிங் போன்றோரைக் குறிப்பிடலாம்.
மேலும் இவ்விளையாட்டுகளில் இந்தியாவின் ஈட்டு எறிதல் போட்டிக்கான உலக வெற்றியாளர் நீரஜ் சோப்ரா, தாய்லாந்தின் பேட்மிண்டன் உலக வெற்றியாளர் குன்லாவுட் விடிட்சார்ன் போன்றோரும் பங்கேற்பதால் போட்டி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இதுவரை இல்லாத அளவில் 431 போட்டியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களில் 91 பேர் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய விளையாட்டுகள் தொடக்க விழாவில் சிங்கப்பூர் சார்பில் நாட்டுக்கொடி ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தற்காலிகத் தலைவர் ஜெஸ்ஸி புவா பார்வையாளர் கூடத்திலிருந்து ஆனந்தக் கூச்சல் எழுப்ப, வூஷு வீரர் ஜோவன் லிம்மின் வாள்வீச்சு வீராங்கனை அமிதா பெர்தகியர் இருவரும் கொடியேந்தி சென்றனர்.