அமெரிக்கா: அமெரிக்காவில் சில உணவகங்கள் ‘மைமோசா’ எனப்படும் பானக் கலவையை விற்பனை செய்கின்றன.
அது, ‘ஒயின்’ பானத்துடன் ஆரஞ்சுச் சாறு சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இந்த பானத்தை அருந்தலாம் என்று சில உணவகங்கள் சலுகை வழங்குகின்றன. ஆனால் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கும் வாடிக்கையாளர்களால் உணவக நிர்வாகத்தினருக்குச் சங்கடம்.
ஒருவகையில் இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றாலும் அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் குடித்துவிட்டு வாந்தி எடுக்கும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் திணறிப்போன உணவகத்தினர் இதற்கொரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தனர்.
கிச்சன் ஸ்டோரி எனும் உணவகம், அறிவிப்புப் பலகை ஒன்றை அமைத்தது. பொறுப்புள்ள முறையில் குடிக்கும்படி ஆலோசனை கூறியதுடன், குடித்துவிட்டு உணவகத்தினுள் வாந்தி எடுத்தால் சுத்தம் செய்வதற்காக 50 அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதில் எழுதி வைத்தது.
இந்த உத்திக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக அந்த உணவகம் கூறியது. இன்னும் அவ்வாறு கட்டணம் வசூலிக்கும்படி நேரவில்லை என்றும் அது சொன்னது.
“வாந்தியை சுத்தம் செய்வது மிகவும் சிரமமான பணி. அதன் மூலம் கிருமி பரவக்கூடும் என்று மக்களுக்கு அச்சம். எங்கள் ஊழியர்களுக்கும் வாந்தியைச் சுத்தம் செய்வதில் விருப்பம் இல்லை,” என்று கூறிய உணவக நிர்வாகத்தினர், “நிலைமை இப்போது மேம்பட்டுள்ளது. இன்னும் சிலர் வாந்தி எடுக்கின்றனர். ஆனால் அவர்கள் உணவகத்தைவிட்டு வெளியே சென்று வாந்தி எடுக்கின்றனர்,” என்று குறிப்பிட்டனர்.
உணவகங்கள் மட்டுமன்றி, ஊபர் நிறுவனமும், வாடகை காரில் பயணி வாந்தி எடுத்தால் அதைச் சுத்தப்படுத்துவதற்காக 20 முதல் 150 அமெரிக்க டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க ஓட்டுநர்களை அனுமதிக்கிறது.