அக்டோபரில் ஏர்பஸ் ஏ321எல்ஆர் விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிக குளிரும் சத்தமும் இருந்தது. அந்த விமானத்தின் சன்னல் கண்ணாடிகளில் ஒன்று காணாமல் போனதே அதற்கு காரணம்.
அக்டோபர் 4ஆம் தேதி லண்டனிலிருந்து புறப்பட்ட டைடான் ஏர்வேசின் அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது என்று பிரிட்டனின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவின் (ஏஏஐபி) அறிக்கை தெரிவித்தது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஓர்லாண்டோ அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி அந்த விமானம் செல்வதாக இருந்தது.
சிறப்பு விமானத்தில் 11 விமானச் சிப்பந்திகள், விமான நிறுவனத்தின் ஊழியர்கள் உட்பட ஒன்பது பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் புறப்பட்டதும் வழக்கத்திற்கு மாறாக குளிராகவும் மிகவும் சத்தமாகவும் இருந்தது என்று அதில் இருந்த பயணிகள் கூறியதாக அறிக்கை குறிப்பிட்டது.
விமானச் சிப்பந்தி ஒருவர் நெருக்கமாகச் சென்றுபார்த்தபோது ஒரு சன்னலின் கண்ணாடி கழன்றுவருவதுபோல இருந்தது. அதனால் காதை செவிடாக்கும் அளவுக்கு சத்தம் ஏற்பட்டது.
விமானம் புறப்பட்டு 14,000 அடி உயரத்தை எட்டியதும் மேலும் விமானத்தை எழுப்பாமல் விமானி வேகத்தை குறைத்துவிட்டார். பின்னர் சன்னலை அவர் சோதனையிட்டார்.
விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்புவது என முடிவு செய்யப்பட்டது. விமானம் புறப்பட்ட 36 நிமிடத்தில் ஸ்டான்ஸ்டெட்டில் தரையிறங்கியது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு சன்னல்களின் சட்டங்கள் கழன்று இருந்தன. ஒரு சன்னலின் உள்பக்கக் கண்ணாடியை காணவில்லை. மொத்தம் நான்கு சன்னல்கள் சேதமடைந்திருந்தன.
விமானம் தரையிறங்கியதும் வழக்கமான ஓடுதளச் சோதனையில் விமானத்தின் உடைந்த கண்ணாடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
விமானம் சுமார் 10,000 அடி உயரத்தில் இருந்தபோது பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு திருப்பப்பட்டது. இதுவே, அதிக உயரத்தில் இருந்தால் கடுமையான விளைவுகளை ஏற்பட்டிருக்கும்,” என்று அறிக்கை எச்சரித்தது.