ஒட்டாவா: உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறி, நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்களை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க வேண்டாம் எனக் காணொளி ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கனடியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் பப்லோ ரோட்ரிகேஸ், “ஒவ்வொரு மிரட்டலையும் நாங்கள் கடுமையானதாகக் கருதுகிறோம். அதுவும், விமானங்களுடன் அது சம்பந்தப்படும்போது நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம்,” என்று கூறினார்.
‘நீதிக்கான சீக்கியர்கள்’ எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், அக்காணொளியைப் பதிவேற்றம் செய்தார். இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதி எனக் கருதப்படும் அவர், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு இயக்கங்களில் ஈடுபட்டுள்ளார்.
சமூக ஊடகத்தில் வலம்வரும் அந்தக் காணொளியில் பேசிய பன்னூன், “ஏர் இந்தியாவில் பறக்க வேண்டாம் என சீக்கியர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நவம்பர் 19 முதல் ஏர் இந்தியா இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது. சீக்கியர்களே, ஏர் இந்தியாவில் பயணம் செய்யாதீர்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்,” என்று எச்சரித்தார்.
இந்தியா-கனடா உறவில் அந்தக் காணொளி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 1985ல் ஏர் இந்தியா தகர்க்கப்பட்ட நினைவுகளை அது எழுப்புகிறது. கனடிய வரலாற்றில் ஆக மோசமான அந்தப் பயங்கரவாத சம்பவத்தில் 329 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளி கனடியர்கள்.
இந்நிலையில், இந்தக் காணொளியைப் பயங்கரவாத மிரட்டல் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய அரசாங்கம், பன்னூனுக்கும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் எதிராக உடனடி, கடும் நடவடிக்கை எடுக்கும்படி கனடிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது.