ஜோகூர் பாரு: ஜோகூரில் மழைப்பொழிவு அதிகரிப்பதுடன் வெள்ளம் ஏற்படும் சம்பவங்களும் அதிகரிக்கும் என்று மலேசிய ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்த சில ஆண்டுகளில் சராசரியாக ஜோகூரில் மழைப்பொழிவு 20 முதல் 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக (யுடிஎம்) ஆய்வாளர் ஸுல்ஃபக்கர் சா’அடி தெரிவித்துள்ளார்.
யுடிஎம்மின் சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை, தண்ணீர் பாதுகாப்பு நிலையத்தில் ஆய்வாளராக உள்ள இவர், ‘த ஸ்டார்’ நிறுவனத்திடம் இதனைத் தெரிவித்தார்.
“நாங்கள் திரட்டி, பகுப்பாய்ந்த தரவுகளின்படி, இப்போது முதல் 2060ஆம் ஆண்டு வரை ஜோகூரில் கூடுதல் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நவம்பருக்கும் ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் இதைக் காணலாம்,” என்றார் அவர்.
இவ்வாறு மழைப்பொழிவு அதிகரிப்பதால் எளிதில் தண்ணீர் கிட்டுவதற்குச் சாதகமாக இருந்தாலும் மாநிலம் வெள்ளத்தில் சிக்கும் அபாயமும் அதிகரிப்பதாக டாக்டர் ஸுல்ஃபக்கர் சுட்டினார்.
கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் பகுதிகளில் கோத்தா திங்கியும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பகுதி ஏற்கெனவே வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறது.
இருப்பினும், 2061ஆம் ஆண்டுக்கும் 2100ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் குறித்த முன்னுரைப்பில் உயரும் தட்பவெப்பநிலையால் ஜோகூரில் மழைப்பொழிவு குறையும் என்றார் அவர்.
அந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு கவலைக்குரிய அம்சமாக மாறும் என்று குறிப்பிட்டார் டாக்டர் ஸுல்ஃபக்கர்.