இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாருவில் அமையக்கூடிய மூன்று இலகு ரயில் (எல்ஆர்டி) பாதைகளை ஜோகூர் அடையாளம் கண்டுள்ளது.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் வேக ரயில் இணைப்புப் பாதை (ஆர்டிஎஸ் லிங்க்) திட்டத்திற்குத் துணையாக இந்த இலகு ரயில் பாதைகள் அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
இஸ்கந்தர் வட்டார வளர்ச்சி ஆணையம், ஜோகூர் பொதுப் போக்குவரத்துக் கழகம் ஆகிய இரண்டும் கூட்டாக மேற்கொண்ட ஆய்வு குறித்து மாநிலப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்புப் பணிக்குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சலே பேசினார்.
“2027ஆம் ஆண்டின் முற்பாதியில் முடிவடைவதாக உள்ள ஜோகூர் பாரு-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் லிங்க் திட்டத்துக்குத் துணையாக எல்ஆர்டி திட்டம் ஜோகூர் பாருவில் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வு பரிந்துரை செய்கிறது.
“ஆய்வின்படி தெப்ராவ் பாதை, ஸ்கூடாய் பாதை, இஸ்கந்தர் புத்ரி பாதை ஆகியவற்றை அமைக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 கிலோமீட்டர் நீளமுடைய ஒவ்வொரு பாதையும் கூலாயில் உள்ள செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் முடிவதாக இருக்கும்,” என்றார் திரு முகம்மது ஃபஸ்லி.
புக்கிட் பாசிர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள இவர், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) கோத்தா இஸ்கந்தரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மற்ற போக்குவரத்து முறைகளில் அமைந்த திட்டங்களுக்கும் தோதாக ஜோகூர் பாருவில் அமைக்கப்படவுள்ள எல்ஆர்டி போக்குவரத்துக் கட்டமைப்பு விளங்கும் என்றார் அவர். இத்திட்டங்களில் ‘கெமாஸ்-ஜோகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டைத் தடத் திட்டம்’, ‘பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம்’ ஆகியவை அடங்கும்.
இருப்பினும் ஜோகூர் பாருவின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்வதாக இந்த யோசனைகள் உள்ளனவா என்பது குறித்து மேலும் ஆழமான ஆய்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார் திரு முகம்மது ஃபஸ்லி.
மத்திய அரசாங்கத்திடம் எல்ஆர்டி திட்டத்துக்காக அனுமதி கோருவதற்கு முன் அடுத்த கூட்டத்தில் ஆகப் பொருத்தமான திட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று திரு முகம்மது ஃபஸ்லி தெரிவித்தார்.