மிச்சிகன்: ஈராண்டுகளுக்கு முன்னர் தமது வகுப்பு தோழர்கள் நால்வரை துப்பாக்கியால் சுட்ட பதின்ம வயது ஆடவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க-கனடா எல்லையில் உள்ள டெட்ராய்ட் நகரின் வெளிப்புறத்தில் உள்ள ஆக்ஸ்ஃபர்ட் உயர்நிலைப் பள்ளியில் 2021 நவம்பர் 30ஆம் தேதி அந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.
ஏதன் கிரம்ப்ளி எனப்படும் 15 வயது மாணவர் தமது சக மாணவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். ஆசிரியர் ஒருவரும் இதர ஆறு மாணவர்களும் காயமடைந்தனர்.
14 வயது மாணவி, 16 வயது மாணவரோடு 17 வயது நிரம்பிய இரு மாணவர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
சம்பவத்தின் தொடர்பில் கிரம்ப்ளியின் பெற்றோர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அமெரிக்காவில், பள்ளிக்கூடத்தில் பிள்ளை நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பெற்றோர் பொறுப்பேற்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு வழங்கப்பட்டபோது கிரம்ப்ளியை பரோலில் விடுவிக்க அவரது வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஓக்லாந்து மாவட்ட நீதிபதி குவாம் ரேவ் மறுத்துவிட்டார்.
நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலை இது என்று நீதிபதி கடுமையாகக் குறிப்பிட்டார். தமது செயல்களுக்குத் தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாக நீதிபதியிடம் கிரம்ப்ளி தெரிவித்தார்.