கியவ்: ரஷ்யா நடைமுறைப்படுத்திய வழிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் உக்ரேன் முதன்முறையாக ஜனவரி மாதம் ஏழாம் தேதிக்குப் பதிலாக டிசம்பர் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடவுள்ளது.
பொதுவாக கிறிஸ்துவர்கள் டிசம்பர் 25ல் கிறிஸ்துமசைக் கொண்டாடுவர். அன்றே அப்பண்டிகையைக் கொண்டாட வகைசெய்யும் சட்டத்தை உக்ரேன் ஜூலை மாதம் இயற்றியது.
தங்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி தங்களுக்கான விடுமுறை நாள்களை அனுசரித்து வாழ உக்ரேனியர்கள் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ரஷ்ய பாரம்பரிய முறைப்படி ஜனவரி ஏழாம் தேதியன்று கிறிஸ்துமசைக் கொண்டாடும் வழக்கத்தை உக்ரேனியர்கள் கைவிட புதிய சட்டம் வழிவகுப்பதாக திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.
உக்ரேனில் பெரும்பான்மையினர் கிறிஸ்துவர்கள். அந்நாட்டில் அண்மைக் காலம் வரை சமயம் சார்ந்த நடைமுறைகளில் ரஷ்யா அதிகம் தலையிட்டு வந்தது.
உக்ரேனில் ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் தாக்கம் இருப்பதைக் காட்டும் அறிகுறிகளை அகற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின்கீழ் சாலைகள், அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டு வருவதும் அடங்கும்.
உக்ரேனின் மரபு சார்ந்த தேவாலயமும் (ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஆஃப் உக்ரேன்) கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை டிசம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது. 2019ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரார்த்தனை நடத்திய அந்தப் புதிய தேவாலயம் சுயேச்சையாக இயங்குகிறது.
2014ஆம் ஆண்டில் ரஷ்யா, கிரைமியா வட்டாரத்தைத் தன்வசம் கொண்டு வந்தது. அதோடு, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து உக்ரேனின் மரபு சார்ந்த தேவாலயம், ரஷ்யாவின் மரபு சார்ந்த தேவாலயத்துடனான தொடர்புகளை அதிகாரபூர்வமாகத் துண்டித்துக்கொண்டது.