ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் சீன நிதியுதவியுடன் கூடிய நிக்கல் பதப்படுத்தும் ஆலையில் வார இறுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18க்கு உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பலர், மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறை அதிகாரி டிசம்பர் 26ஆம் தேதி அன்று தெரிவித்தார்.
மத்திய சுலாவேசி மாகாணத்தில் உள்ள மொரோவாலி தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் டிசம்பர் 23ஆம் தேதி காலையில் தொழிலாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
இறந்தவர்கள் தீக்காயங்களால் பாதிக்கபட்டனர் என்றும் அவர்களுடைய உடல்களில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் மொரோவலி காவல்துறைத் தலைவர் சுப்ரியன்டோ கூறினார்.
இறந்தவர்களில் 8 பேர் வெளிநாட்டினர், 10 பேர் இந்தோனீசியர்கள் என்றும் 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் ஆறு பேர் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பராமரிப்புக்காக மூடப்பட்ட உலையிலிருந்து எஞ்சியிருந்த கசடுகள் வெளியேறி, அந்த இடத்தைச் சுற்றிலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுடன் கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தீ, டிசம்பர் 23ஆம் தேதி அன்று அணைக்கப்பட்டது.