சோல்: புத்தாண்டுக்கான அரசு கொள்கை முடிவுகளை வெளியிடுவதற்கு, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் ஆளும் கட்சியின் முக்கியக் கூட்டத்தைத் தொடங்கினார் என்று அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ புதன்கிழமை செய்தி வெளியிட்டது.
செவ்வாய்கிழமை கூட்டத்தின் முதல் நாளன்று, ஆறு முக்கிய அம்சங்கள் கலந்துரையாடப்பட்டன.
அவற்றுள், கொள்கையுடன் வரவு செலவுத் திட்ட அமலாக்கம், 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், கட்சியின் தலைமையை வலுப்படுத்துதல் போன்றவை அடங்கும் என்று கேசிஎன்ஏ கூறியது.
2023 ஆம் ஆண்டு பல திருப்பங்களையும் மாற்றங்களையும் கண்டிருப்பதாக திரு கிம் கூறினார். இடையிடையே சறுக்கல்கள் இருந்திருந்தாலும், ராணுவம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றங்கள் உள்ளன என்று திரு கிம் பாராட்டினார்.
வடகொரியா அண்மையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புதிய ஏவுகணையைச் சோதித்ததை அடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சினமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிராக, வடகொரிய அணுவாயுதப் படைகளின் தயார் நிலையை மதிப்பிடுவது அதன் இலக்கு என்று பியோங்யாங் கூறியது.