சிட்னி: அடுத்த சில நாள்களில் ஆஸ்திரேலியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாள்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கு மேல் செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிகள் மோசமான வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக் கணக்கான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்தன. இந்த இயற்கை பேரிடர்களால் 10 பேர் மாண்டனர்.
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வெப்பமாக இருக்கும். தற்போது நிலவும் ‘எல் நினோ’ என்னும் பருவநிலைமாற்றத்தால் ஆஸ்திரேலியா பாதிப்படைந்துள்ளது.
வெப்பமான மாதங்களில் பொதுவாக இருக்கும் வெப்பத்தைவிட அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும் காட்டுத் தீ, சூறாவளி, வறட்சி ஆகியவற்றாலும் ஆஸ்திரேலியா பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மார்பில் பார் என்னும் பகுதியில் வெப்பம் 49 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களில் குவின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
வெப்ப அலை அதிகமாக இருக்கும் என்பதால் புதர் தீ தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் நெருப்பு பற்ற வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் கிழக்கு மற்றும் தென் ஆஸ்திரேலியாவில் கடுமையான இடி, பலத்த காற்று, கன மழை இருக்கும் என்று அந்நாட்டு வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 31 மாலை வானிலை சீராக இருக்கும் என்பதால் சிட்னியில் நடக்கவிருக்கும் புத்தாண்டு வாணவேடிக்கைகள் எந்தத் தடையுமின்றி நடக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.