மணிலா: பள்ளம் தோண்டி கடைத்தொகுதிக்குள் நுழைந்து ஏறக்குறைய $1 மில்லியன் பெறுமான நகைகளையும் ரொக்கத்தையும் திருடிய சம்பவம் பிலிப்பீன்ஸில் நிகழ்ந்து உள்ளது.
அச்சம்பவம் தொடர்பாக மூன்று திருடர்களை காவல்துறையினர் தேடி வருவதாக பிலிப்பீன்ஸ் ஊடகம் ஒன்று குறிப்பிட்டது.
தலைநகர் மணிலாவிலிருந்து 783 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓஸாமிஸ் நகரின் கைசானோ கடைத்தொகுதியில் 2023 டிசம்பர் 31ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்ததாக ‘ராப்ளர்’ இணையச் செய்தி கூறியது.
கடைத்தொகுதியின் பின்புறம் அமைந்துள்ள தனியார் பகுதியில் விழா ஒன்று நடைபெற்ற வேளையில் திருடர்கள் சுரங்கம் தோண்டத் தொடங்கினர்.
அங்கிருந்து நீர் வடிகால் வழியாக கடைத்தொகுதியின் உணவு நிலையம் வரை ஆள் நுழையும் அளவுக்கு பொந்து ஒன்றை அவர்கள் உருவாக்கியதாக ஏபிஎஸ்-சிபிஎன் ஊடகம் குறிப்பிட்டது.
அவர்களின் திருடிய நகை மற்றும் ரொக்கத்தின் மதிப்பு 41 மில்லியன் பீஸோ (S$976,000) என்று மதிப்பிடப்பட்டது.