வாஷிங்டன்: வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஒரு லிட்டர் தண்ணீர் போத்தலில் ஏறக்குறைய 240,000 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்தத் துகள்களில் பல, பலகாலமாகக் கண்டறியப்படவில்லை. இதனால், பிளாஸ்டிக் தூய்மைக்கேடு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் அதிகம் இல்லை என்று மனிதர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என இந்த ஆய்வில் ஈடுபட்டோர் கருதுகின்றனர்.
‘புரோசீடிங்ஸ் ஆஃப் த நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ எனும் சஞ்சிகையில் ஜனவரி 8ஆம் தேதி, புதிய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
போத்தலில் அடைக்கப்பட்டுள்ள தண்ணீரில் ஒரு மைக்ரோமீட்டருக்குக் குறைவான நீளமுள்ள ‘நேனோபிளாஸ்டிக்ஸ்’ எனும் துகள்கள் காணப்படுகின்றனவா என்று முதல்முறையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் துகள்கள் மனிதர்களின் முடியின் எழுபதில் ஒரு பங்கு அகலம் கொண்டது.
முன்னர் மதிப்பிடப்பட்டதைவிட 100 மடங்கு அதிகமாக இந்தத் துகள்கள் போத்தல் தண்ணீரில் காணப்படுவதை இந்த ஆய்வு கண்டறிந்தது. முந்தைய ஆய்வுகளில் ‘மைக்ரோபிளாஸ்டிக்’ எனப்படும் துகள்கள் குறித்து மட்டுமே ஆராயப்பட்டது. அவை 1 முதல் 5,000 மைக்ரோமீட்டர் நீளம் கொண்டவை.
‘மைக்ரோபிளாஸ்டிக்’ துகள்களைக் காட்டிலும் ‘நேனோபிளாஸ்டிக்’ துகள்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குக் கூடுதல் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அளவில் சிறியதாக இருப்பதால் ‘நேனோபிளாஸ்டிக்’ துகள்கள் மனிதர்களின் உயிரணுக்களைத் துளைக்க வல்லவை. ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் உறுப்புகளை இவை பாதிக்கும்.
தொப்புள் கொடி மூலம் கருவில் இருக்கும் சிசுவின் உடலையும் இவை சென்றடையக்கூடும்.
போத்தல் தண்ணீரில் இவை இருக்கக்கூடும் என்று நீண்டகாலமாகவே அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தனிப்பட்ட நேனோ துகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பம் இதுவரை இல்லாததால் அதை உறுதிசெய்ய இயலவில்லை.
புதிய ஆய்வில், அதற்கான தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் அதிகம் புழக்கத்தில் உள்ள மூன்று நிறுவனங்களின், ஒரு லிட்டர் தண்ணீர் போத்தல்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 110,000 முதல் 370,000 வரையிலான மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன. அவற்றில் 90 விழுக்காடு ‘நேனோபிளாஸ்டிக்’ துகள்கள்.
இதுவரை தெளிவுபடுத்தப்படாத பல அம்சங்களைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு கைகொடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.