தோக்கியோ: தோக்கியோ ஹனேதா விமான நிலைத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கிய விமானத்தின் பாகங்களை பாதுகாக்க ஜப்பானிய ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தனது ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கவும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்தவும் அந்தப் பாகங்களை காட்சிப்படுத்துவது குறித்தும் அது பரிசீலித்து வருகிறது.
ஜனவரி 2ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் ஜப்பானிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடற்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இறக்கை, இயந்திரம் போன்ற இதர பாகங்களுக்கு சேதமில்லை.
ஜனவரி 7ஆம் தேதி அன்று சம்பவ இடத்திலிருந்து விமானத்தின் சிதைவுகள் அகற்றப்பட்டு ஹனேதாவில் உள்ள ஜப்பானிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாக்கப்படுவதாக ஜப்பானிய போக்குவரத்து பாதுகாப்புக் கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப் பாதுகாப்புக்கு இந்தச் சம்பவம் ஒரு மதிப்புமிக்க பாடமாக இருக்கும் என்று ஜப்பானிய ஏர்லைன்ஸ் கருதுவதால், விமானத்தின் சிதைவுகளைப் பாதுகாப்பது குறித்து நில, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, பயணத் துறை அமைச்சு, இயந்திர தயாரிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அது ஆலோசனை நடத்தி வருகிறது.