தைப்பே: தைவானில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றிபெற்றதை அடுத்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சீனாவின் தைவானிய விவகார அலுவலகப் பேச்சாளர், திரு லாயின் வெற்றி இருதரப்பு உறவின் அடிப்படை அம்சங்களில் மாற்றம் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். சீனாவின் அரசாங்க ஊடகமான சின்ஹுவா அதனைத் தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள், ஜனநாயக முன்னேற்றக் கட்சி தைவானின் பெரும்பாலான மக்களின் கருத்தைப் பிரதிபலிக்க இயலாது என்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வாக்களிப்பு தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பு, தைவானிய அதிபர் தேர்தலில் எந்த நாடும் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாஷிங்டன் கூறியது. தேர்தல் குறித்துக் கருத்துரைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “தைவான் சுதந்திரம் பெறுவதை நாங்கள் ஆதரிக்கவில்லை,” என்று கூறினார்.
இதற்கிடையே, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன், தைவானின் புதிய அதிபர் லாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவும் தைவானும் அவற்றுக்கு இடையிலான கருத்து வேற்றுமைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாணும் முயற்சிகளைப் புதுப்பிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வேளையில், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ கமிகாவா, திரு லாயின் வெற்றிக்கும் தேர்தல் சுமுகமாக நடைபெற்றதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
“தைவான், ஜப்பானின் முக்கியப் பங்காளியும் நட்பு வட்டாரமும் ஆகும். இருதரப்பும் பொதுவான அடிப்படை விழுமியங்களைக் கொண்டுள்ளன. இருதரப்புக்கும் இடையில் அணுக்கமான பொருளியல் உறவுகளும் மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களும் நிலவுகின்றன,” என்றார் அவர்.
இந்நிலையில், மாஸ்கோ தைவானைத் தொடர்ந்து சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா ஸக்கரோவா கூறியிருக்கிறார்.
பிரெஞ்சு நாடாளுமன்றக் கீழவைத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட், தைவானின் ஜனநாயகத்திற்கும் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தைவான் நீரிணைப் பகுதியில் சட்டம், அமைதியை நிலைநாட்ட தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.