வாஷிங்டன்: அமெரிக்காவின் அயோவா மாநில முன்னோடித் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், வெற்றிக்கு பின் ஆற்றிய உரையில், அமெரிக்காவை ஒன்றுபடுத்தக்கூடியவராக தன்னை முன்னிலைப்படுத்தி உள்ளார்.
அயோவா முன்னோடித் தேர்தலில் திரு டிரம்ப் இரண்டு பெரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
ஒன்று அவர் பெற்ற பெரிய அளவிலான வாக்குகள். அடுத்து இதன் மூலம் அவர் தன்னை அடுத்த முன்னோடித் தேர்தலுக்கு மிக எளிதில் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது.
அயோவா மாநிலத்தில் உள்ள 99 பிரிவுகளில் 98ல் 77 வயது நிரம்பிய திரு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“அனைவரும், அவர்கள் குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், இல்லை முற்போக்குவாதி அல்லது பழமைவாதியாக இருந்தாலும், ஒன்றுசேர வேண்டிய நேரம் வந்துள்ளது,” என்று தனது ஆதரவாளர்கள் முன் நிகழ்த்திய 20 நிமிட உரையில் திரு டிரம்ப் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை 95% முடிந்த நிலையில், அவருடைய வாக்கு விகிதம் 51% விழுக்காடாக இருப்பதை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் நிலையில் வந்த டி சான்டிஸ் என்ற வேட்பாளர் 21.2% வாக்குகளே பெற்றார்.
அமெரிக்காவின் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க தூதராக பணிபுரிந்த நிக்கி ஹேலி 19.1% வாக்குகள் பெற்றார். அயோவா வாக்கெடுப்பில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான உயிர்தொழில்நுட்ப செல்வந்தர் விவேக் ராமசாமி 8% வாக்குகள் பெற்று இனிப் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். முன்னோடித் தேர்தலில் தோற்ற திரு விவேக் ராமசாமி, டோனல்ட் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த முன்னோடித் தேர்தல் நியூ ஹேம்ஷியர் மாநிலத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திரு டிரம்ப் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் என இரு தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல முற்படுவது, திருவாட்டி ஹேலியைப் போட்டியில் வீழ்த்தும் நோக்கம் கொண்டது என்று கூறப்படுகிறது.
அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் திரு டிரம்ப் முன்னணி வகிக்கும் நிலையில், அவர் அதிபரானால் அது கனடாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார். மற்றொருபுறம், பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், அடுத்த அதிபராக யார் வந்தாலும் தாம் அவருடன் பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.