ஜோகூர் பாரு: வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்துக்கு சென்ற ஆண்டு இருமுறை 250 லிட்டர் வரை அளவிலான டீசலை விற்றதாக மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அச்செயலைப் புரிந்ததாக நம்பப்படும் 38 வயது சொராயா முகம்மது தாம்யெஸ் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். நீதிபதியின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு சொராயா விசாரணை கோரினார்.
விதிமுறைகளின்படி ஒருநாளில் வெளிநாட்டு வாகனங்களுக்கு ஒரு பரிவர்த்தனையில் 20 லிட்டருக்கு மேற்பட்ட டீசலை நிரப்பக்கூடாது.
சென்ற ஆண்டு மே மாதம் 19, 30ஆம் தேதிகளில் ஜாலான் கெம்பாஸ் பாருவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சொராயா சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ஒரு பேருந்துக்கு இருமுறை தலா 250 லிட்டர் டீசலை விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. முதல் சம்பவம் மே 19ஆம் தேதி காலை 11.04 மணிக்கும் இரண்டாவது சம்பவம் மே 30ஆம் தேதி காலை 10.34 மணிக்கும் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.