இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குச் சொந்தமான பரிசுப்பொருள்களை அவர்கள் விற்றதற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாக இம்ரான் கானின் கட்சி ஜனவரி 31ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிறைத் தண்டனையுடன் அரசுப் பதவி வகிக்க இம்ரான் கானுக்குப் பத்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் புஷ்ரா பீபி கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாகக் கூறி ஜனவரி 30ஆம் தேதியன்று அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
“பாகிஸ்தானின் நீதித்துறை சீரழிந்துவிட்டது. குறுக்கு விசாரணைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தீர்ப்பு ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த நியாயமற்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்,” என்று இம்ரான் கானின் ஊடகக் குழு கூறியது.
71 வயது இம்ரான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அது மறுத்தது.