மணிலா: பிலிப்பீன்ஸ் தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவதற்கு அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒப்புதல் அளித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இது, அந்நாட்டு ராணுவத்தின் மூன்றாம் கட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டது.
தென் சீனக் கடலில் நிலவி வரும் பிரச்சினைகளில் இருந்து தங்கள் நாட்டின் கடல்சார் இறையாண்மையைத் தற்காத்து கொள்ள இந்நடவடிக்கையைப் பிலிப்பீன்ஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டுத் தற்காப்பிலிருந்து நாட்டின் எல்லைத் தற்காப்புக்கான உத்தி மாற்றத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூன்றாம் கட்டம் பிரதிபலிப்பதாக மேற்கு பிலிப்பீன்ஸ் கடலுக்கான கடற்படை பேச்சாளர் ராய் டிரினிடாட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
எங்களிடம் ஒரு பெரிய கடற்படை இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் நாட்டின் உரிமைகளையும் இறையாண்மையையும் கவனித்துகொள்வதற்கு ஏற்ற கடற்படை எங்களிடம் உள்ளது,” எனத் திரு டிரினிடாட் கூறினார்.
“நாட்டின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் மதிப்பு 2 டிரில்லியன் பெசோஸ் ($35.62 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டம் கட்டமாக பல ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,” என அவர் மேலும் எடுத்துரைத்தார்.
தென்சீனக் கடல் பகுதியில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக சீனாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை பிலிப்பீன்ஸ் வெளியிட்டுள்ளது.
தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் இருக்கும் தென் சீனக் கடற் பகுதியை மேற்கு பிலிப்பீன்ஸ் கடல் எனப் பிலிப்பீன்ஸ் குறிப்பிடுகிறது.
எத்தனை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க பிலிப்பீன்ஸ் உத்தேசித்துள்ளது என்பதை உடனடியாக அவரால் கூற முடியவில்லை என்றாலும் “நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்டவை” என அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ், ஸ்பெயின், கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் பிலிப்பீன்சுக்கு நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க ஆர்வம் காட்டியுள்ளன என்றார் திரு டிரினிடாட்.