கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலம் பாதியாகக் குறைக்கப்பட்ட செய்தி அறிந்த மலேசியர்கள் சிலர் அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்தினர்.
ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற அரச மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் நஜிப்பின் தண்டனைக் குறைப்பு தொடர்பான மேல்முறையீடு பரிசீலிக்கப்பட்டது. முன்னாள் மாமன்னர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் நஜிப்பின் 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கவும் 210 மில்லியன் ரிங்கிட் (S$59.8 மில்லியன்) அபராதத் தொகையை 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை அறிந்த மலேசியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். அரச மன்னிப்பு வாரியம் தவறிழைத்துவிட்டதாகவும் இது நாட்டுக்கு ஒரு தவறான உதாரணம் என்றும் அவர்கள் கூறினர்.
48 வயது நிர்வாகியான திருவாட்டி வில்சன் என்பவர் கூறுகையில், “இந்த ஆறு ஆண்டு தண்டனைகூட ஈராண்டுகளாகக் குறைக்கப்பட்டாலோ அல்லது நஜிப் முழுமையாக விடுதலை பெற்றாலோ நான் ஆச்சரியப்படப்போவதில்லை,” என்றார். வாரியத்தின் முடிவு நீதியைக் கேலிக்கூத்தாக்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், நஜிப் தமது முழுமையான தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டும் என்றார்.
மற்றொருவரான திருவாட்டி ஹமிமா, 43, என்னும் அலுவலகச் செயலாளர் கூறுகையில், “இது தவறான முடிவு. மலேசியாவுக்குத் தவறான உதாரணம். புதிய முடிவால் நாட்டின் தலைவர்கள் அச்சமின்றி ஊழலில் ஈடுபடுவார்கள்,” என்றார். ஐடா லோபெஸ் எனும் மற்றொரு ஃபேஸ்புக் பயணர், மலேசியாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தித் தந்த ஒருவருக்கு தாராளமான தண்டனைக் குறைப்பு இது,” என்று சாடினார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஜிப், இதுவரை 17 மாதங்களை சிறையில் கழித்துள்ளார்.
2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் காஜாங் சிறைச்சாலையில் உள்ள 70 வயது நஜிப், மாமன்னரின் அரச மன்னிப்புக் கோரி விண்ணப்பம் செய்திருந்தார்.