மணிலா: பிலிப்பீன்சைத் துண்டு துண்டாகப் பிரிக்க எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக அதிகார, படை பலம் பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எட்வார்டோ அனோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது சொந்த மாநிலமான மின்டனாவைப் பிலிப்பீன்சிலிருந்து பிரிக்கப்போவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பிலிப்பீன்ஸ் அரசியலமைப்புச் சட்டத்தை அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் திருத்தினால் மின்டானாவ் மாநிலம் தனிநாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்று திரு டுட்டர்ட்டே அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளியலை மேம்படுத்தும் வகையில் 1987ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களைத் திருத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு திரு மார்கோஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் தமது அதிகாரத்தை வலுப்படுத்த திரு மார்கோஸ் நடவடிக்கை எடுப்பதாக திரு டுட்டர்ட்டே குற்றம் சுமத்தியுள்ளார்.