ஹாங்காங்: ஹாங்காங் விமான நிலையத்தில் ஊழியர் ஒருவர், பழுதுபார்ப்பதற்காக இழுத்துச் செல்லப்பட்ட விமானம் மோதி உயிரிழந்தார்.
மாண்டவர் ஹாங்காங்கில் வேலை செய்யும், ஜோர்தானைச் சேர்ந்த 34 வயது ஆடவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
மற்ற வாகனங்களை ஏற்றிச் செல்லும் ‘டோ ட்ரக்’ லாரியின் ஓட்டுருக்கு அருகில் உள்ள இருக்கையில் மாண்ட ஆடவர் அமர்ந்திருந்ததாக நம்பப்படுகிறது. அவர் வாகனத்திலிருந்து விழுந்ததை அடுத்து, விமானம் அவர்மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை இந்த விவரங்களை வெளியிட்டது.
மோசமாகக் காயமடைந்த அந்த ஆடவர் விமானம் நகரும் பாதையில் கிடந்ததை அவசர உதவி ஊழியர்கள் கண்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.
‘சைனா ஏர்கிராஃப்ட் சர்விசஸ்’ எனும் நிறுவனத்தில் ஆடவர் வேலை செய்ததாக ஹாங்காங் விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.
மரணம் விளைவிக்கும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் லாரியின் 60 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.