வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் எல்லையை மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்
கூடுதல் காலத்துக்குத் தற்காலிகமாகப் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தாம் எடுத்து வருதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“உங்களுக்குத் தெரிந்திருக்கும், காஸா பகுதியில் ராணுவ ரீதியாகக் கொடுக்கப்படும் பதிலடி எல்லையை மீறிவிட்டது என்பது எமது கருத்து என்று,” என திரு பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் சொன்னார். திரு பென்யாமின் நெட்டன்யாஹுவின் தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கத்தை திரு பைடன் இதுவரை இவ்வளவு தூரம் சாடியதில்லை.
பாலஸ்தீன பொதுமக்களுக்குக் கூடுதல் மனிதாபிமான உதவியை அனுப்பவும் ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காகப் போரைத் தற்காலிகமாக நிறுத்தச் செய்யவும் தாம் முயற்சி எடுத்து வருவதாக திரு பைடன் கூறினார்.
“பிணைக் கைதிகளை விடுவிக்கப் போரைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக இறங்கியுள்ளேன். அப்பாவி மக்கள் பலர் உணவின்றித் தவிக்கின்றனர். பல அப்பாவி மக்கள் அபாயத்தில் உள்ளனர், உயிரிழக்கின்றனர். இதை நிறுத்தவேண்டும்,” என்றார் திரு பைடன்.
காஸாவின் தெற்கு முனையில் இருக்கும் ராஃபா நகருக்குப் படைகள் அனுப்பப்பட்டால் அது பேரிடராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா, இஸ்ரேலை முன்னதாக எச்சரித்தது. அந்நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ராஃபாவில் களமிறங்கத் தயாராய் இருக்குமாறு திரு நெட்டன்யாஹு, இஸ்ரேலியப் படைகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ராஃபாவில் உள்ள அகதிகளைக் கருத்தில்கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த முக்கியமான ராணுவ நடவடிக்கைக்கும் தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.
இதற்கிடையே, வியாழக்கிழமை (8 பிப்ரவரி) காலை காஸாவில் இஸ்ரேலியப் படையினர் இரண்டு அமெரிக்கர்களைத் தடுத்து வைத்ததாக வெளியான தகவல்களைத் தாங்கள் அறிவதாக அமெரிக்கா தெரிவித்தது. அது குறித்து கூடுதல் விவரங்களைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.
இந்நிலையில், ஐக்கிய நாட்டுச் சபையின்கீழ் உள்ள பாலஸ்தீனர்களுக்கான அகதிகள் அமைப்புக்கு ஈடில்லை என்று சபையின் தலைமைச் செயலாளர் என்டோனியோ குட்டெரெஸ் எடுத்துரைத்துள்ளார்.
ஹமாஸ், இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த அமைப்பைச் சேர்ந்த 12 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திரு குட்டெரெஸ் தற்காத்துப் பேசியுள்ளார்.
“வேறு எந்த அமைப்பும் குறிப்பிடத்தக்க வகையில் காஸாவில் இயங்கவில்லை. அதனால் வேறு எந்த அமைப்பாலும் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ள முடியாது,” என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திரு குட்டெரெஸ் சொன்னார்.