காஸா: அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதரவு பெற்ற கத்தாரையும் எகிப்தையும் சேர்ந்த அமைதிப் பேராளர்களால் முன்மொழியப்பட்ட போர்நிறுத்த பரிந்துரைக்கு பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளது.
காஸாவில் 135 நாள்களுக்குப் போரை நிறுத்தும் திட்டம் ஒன்றை அது முன்மொழிந்துள்ளது.
மூன்று கட்டங்களாக போரை நிறுத்த ஹமாஸ் பரிந்துரைத்துள்ளதாகவும் ஒவ்வொரு கட்டமும் கிட்டத்தட்ட 45 நாள்கள் நீடிக்கும் எனவும் தான் கண்ட வரைவு ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
ஹமாஸ் முன்மொழிந்த பரிந்துரைகளில் இஸ்ரேலிடம் பிணையக்கைதிகளாக இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிப்பதும் அடங்கும்.
ஹமாசின் பரிந்துரைப்படி, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய பெண்களும் குழந்தைகளும் விடுவிப்பதற்கு ஈடாக அனைத்து இஸ்ரேலியப் பெண் பிணைக் கைதிகள், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் முதல் 45 நாள் போர்நிறுத்த காலகட்டத்தில் விடுவிக்கப்படுவார்கள்.
மீதமுள்ள ஆண் பிணையக்கைதிகள் இரண்டாம் கட்டத்தில் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாம் கட்டத்தில் இரு பிரிவிலும் மாண்டோரின் சடலங்கள் ஒப்படைக்கப்படும்.
மூன்றாம் கட்டத்தின் முடிவில் இருதரப்புகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியிருக்கும் என ஹமாஸ் எதிர்பார்க்கிறது.
இஸ்ரேலிடம் இருக்கும் 1500 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் கட்டுபாட்டில் இருக்கும் காஸா பகுதியை நிர்வகிக்கும் குழு கோரிக்கை வைத்துள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை இஸ்ரேலால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹமாஸ் கூறியது.