ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு சிங்கப்பூர் நேரப்படி பிப்ரவரி 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து, வாக்குச் சீட்டுகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
சிங்கப்பூர் நேரப்படி இரவு ஒன்பது மணி நிலவரப்படி மாதிரி வாக்கு எண்ணிக்கையில் திரு பிரபோவோ சுபியாந்தோ ஏறத்தாழ 75 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வேடன் சராசரியாக 23 விழுக்காட்டுக்கும் 26 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோ சராசரியாக 16 விழுக்காட்டுக்கும் 17 விழுக்காட்டுக்கும் இடைப்பட்ட வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்ததாக மாலை 5.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தோனீசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தோனீசியாவில் 38 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 19 மாநிலங்களில் குறைந்தது 20 விழுக்காடுகளைப் பெற வேண்டும்.
அவ்வாறு நிகழாவிட்டால், ஆக அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு வேட்பாளர்கள் ஜூன் மாதத்தில் மீண்டும் போட்டியிட வேண்டும். மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.