சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ‘அஸ்பெஸ்டோஸ்’ எனப்படும் கல்நார் பாதிப்பு மோசமடைந்துள்ளது.
பள்ளிக்கூடம், விளையாட்டு நிலையம், பேரங்காடி உட்பட மேலும் ஏழு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிப்ரவரி 19ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி மக்களின் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கல்நாரைப் பொது இடங்களிலிருந்து அகற்ற அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து சிட்னியெங்கும் 41 இடங்களில் கல்நார் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
முதன்முதலில் அது விளையாட்டு மைதானம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
இதுவரை பல பூங்காக்களில் உள்ள சில பகுதிகளைச் சுற்றி அதிகாரிகள் தடுப்பு போட்டுள்ளனர்.
இவற்றில் சில பூங்காக்கள் சுற்றுப்பயணிகள் இடையே பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
மாசடைந்த இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.