ஒஸ்லோ: தொற்று காரணமாக நார்வே மன்னர் ஹெரல்ட், மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நார்வே அரச குடும்பம் பிப்ரவரி 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
87 வயது மன்னர் ஹெரல்ட் மலேசியாவுக்கு விடுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
“விடுமுறைக்காக மலேசியா சென்றுள்ள மன்னர் ஹெரல்ட், அங்கு நோய்வாய்ப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து, மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசிய, நார்வே சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அவரை நன்கு பராமரித்து வருகின்றனர்,” என்று நார்வே அரச குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
1991ஆம் ஆண்டிலிருந்து நார்வேயின் சடங்குபூர்வ மன்னராக மன்னர் ஹெரல்ட் இருந்து வருகிறார்.
இவர் ஐரோப்பாவின் ஆக மூத்த மன்னராவார்.
அண்மைக்காலமாகத் தொற்று காரணமாக அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதய அறுவை சிகிச்சையும் செய்துகொண்டவர்.
மன்னர் ஹெரல்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், பட்டத்து இளவரசர் ஹாக்கோன் சடங்குபூர்வ அரசப் பணிகளைக் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.