கோலாலம்பூர்: இந்தியாவின் மூத்த செய்தியாளர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரியான ஏ. சங்கர் மலேசியாவில் ‘இந்திய போதைப்பொருள் பெரும்புள்ளி’ ஒருவர் மறைந்து வாழ்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அந்த சந்தேக நபர் ஒரு மலேசிய குடிமகன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மலேசிய காவல்துறை அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் மேல் விவரம் கேட்டு அணுகியுள்ளனர். இதுவரை இந்திய அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவில்லை என்று மலேசியா கூறுகிறது.
இந்தியாவில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் பெயர் பட்டியலை மலேசிய காவல்துறை ஆராய்ந்தது. அதில் அந்த சந்தேக நபர்கள் மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் ஏதும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
மலேசியாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கும் இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏதும் இல்லை. அதனால் இச்சம்பவம் குறித்து அமெரிக்க போதைத் தடுப்புப் பிரிவு மற்றும் அனைத்துலக காவல் ஆணையம் வழியாகத்தான் இந்தியாவிடம் பேச வேண்டியுள்ளது என்று கோலாலம்பூர் கூறுகிறது.
உலக அளவில் போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மலேசியா ஆதரவு தருவதாகவும் அது குறிப்பிட்டது.
இந்தியாவில் அண்மையில் 300 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது. அதில் தமிழ்நாட்டின் அரசியல்வாதி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிகிற்குத் தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து பேசும்போது சங்கர், போதைப்பொருள் கும்பலுக்கு மலேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்பு இருப்பதாகக் கூறினார்.
மேலும் ஜாஃபரின் முதலாளி மலேசியாவில் இருப்பதாகவும் அவர் இந்திய சினிமா வட்டாரத்தில் பெரிய நட்பைக் கொண்டவர் என்றும் சங்கர் கூறியிருந்தார். சந்தேக நபர் பிடிபட்டால் தமிழ்த் திரை உலகத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று அவர் கூறினார்.
ஜாஃபர் சாதிக் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அவரை திமுக கட்சியில் இருந்து நீக்கியது.