பத்து பகாட்: சிங்கப்பூரர்களான மோட்டார்சைக்கிளோட்டிகள் எட்டுப் பேர் ஒரு குழுவாக மலேசியாவின் பாகோ நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஜோகூரில் லாரி ஒன்று அவர்கள் மீது மோதியது.
மார்ச் 23ஆம் தேதி நடந்த இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் யோங் பெங்கிற்கு (சிங்கப்பூரிலிருந்து 120 கி.மீ.) அருகே நடந்த விபத்து குறித்து அதிகாலை 3 மணிக்குத் தகவல் கிடைத்ததாக பத்து பகாட் மாவட்டக் காவல்துறை கூறியது.
ரமலான் மாத நோன்புக்கு முன்னதாக பாகோவில் உணவு உண்ண அந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் சென்றுகொண்டிருந்ததாக அது குறிப்பிட்டது.
ஒரு மோட்டார்சைக்கிளின் டயர் வெடித்ததால் அதை ஓட்டிய ஆடவர் ஓய்வெடுப்பதற்கான ‘ஆர்&ஆர்’ பகுதியில் நிறுத்த நேரிட்டது. அதையடுத்து அவருக்குமுன் சென்றுகொண்டிருந்த மற்ற ஏழு பேரும் சாலையின் அவசரகாலத் தடத்தில் காத்திருந்தனர்.
அப்போது 33 வயது மலேசிய ஆடவர் ஒருவர் ஓட்டிய கொள்கலன் லாரி, கட்டுப்பாட்டை இழந்து அவசரகாலத் தடத்தில் காத்திருந்த ஆடவர்கள்மேல் மோதியதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
சம்பவத்தில், 26 வயது மோட்டார்சைக்கிளோட்டிகள் இருவர் மாண்டனர். மேலும் நால்வர் பலத்த காயமுற்றனர். ஓர் ஆடவர் மட்டும் காயமின்றித் தப்பித்தார்.
காயமடைந்தவர்கள் மூவாரிலுள்ள சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் லாரி ஓட்டுநருக்கோ அவருடன் பயணம் செய்தவருக்கோ காயம் ஏற்படவில்லை.
லாரி ஓட்டுநர் மார்ச் 25ஆம் தேதி வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொண்டுள்ளது.