பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின் பிங் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு சீன ராணுவத்தின் மிகப் பெரிய மறுசீரமைப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை சீன ராணுவத்தின், அதன் இணைய பார்த்திறன் உட்பட, அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்டுத்தும் என்று கூறப்படுகிறது.
‘ஸ்ட்ரடிஜிக் சப்போர்ட் ஃபார்ஸ்’ என்ற ஆகாய, இணைய, அரசியல், மின் போர் திறன்களை மேம்படுத்துவதற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அந்நாட்டின் சிறப்புப் படைப் பிரிவு கலைக்கப்படும் என்று சீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின் ஹுவா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) அன்று தெரிவித்தது.
அதற்குப் பதிலாக திரு ஸி ‘இன்ஃபர்மேஷன் சப்போர்ட் ஃபார்ஸ்’ என்ற புதிய படைப் பிரிவை உருவாக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னையப் படைப் பிரிவில் இருந்த ஆகாயத் துறை, இணையத் துறையைச் சேர்ந்த பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப் பிரிவுடன் இணையாக செயல்படும் என்று சீனத் தற்காப்பு அமைச்சு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சீன ராணுவம் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து செயல்படும் என்று ஸி ஜின் பிங் மறுஉறுதிப்படுத்தினார். அத்துடன், புதிய படைப் பிரிவு, இணையத் தகவல் முறையை உருவாக்குவது, அதைப் பயன்படுத்துவது ஆகியவற்றை ஒருங்கிணைக்க தேவைப்படும் ஆதரவை வழங்கும் என்று திரு ஸி தெரிவித்துள்ளார்.