வாஷிங்டன்: உக்ரேன், இஸ்ரேல், தைவான் ஆகிய நாடுகளுக்குப் பாதுகாப்பு உதவி வழங்கும் வகையில் 95 பில்லியன் அமெரிக்க டாலர் (S$129.3 பில்லியன்) உதவித் திட்டம் தொடர்பான மசோதாவை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.
குடியரசுக் கட்சியினர் கடுமையாக எதிர்த்தும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக வாக்களிப்பு நடத்த அனுமதிக்குமாறு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நாயகர் மைக் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தனர்.
இனி இந்த மசோதா தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் வாதிடப்படும். ஜனநாயக கட்சியினரைப் பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள செனட் சபை, இந்த மசோதாவை ஏற்று அதை நிறைவேற்றினால் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நிதி கிடைக்கும்
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற சட்டத்தை செனட் சபை நிறைவேற்றியது.
இந்த மசோதா குறித்த பரிசீலனையை ஏப்ரல் 23ஆம் தேதியன்று செனட் சபை தொடங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மசோதாவை ஆதரித்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அது சட்டமாக்கப்படும்.
அவ்வாறு நேர்ந்தால் ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரேனுக்கு 60.84 பில்லியன் அமெரிக்க டாலர், இஸ்ரேலுக்கு 26 பில்லியன் அமெரிக்க டாலர், தைவான் உட்பட இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்கு 8.12 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கப்படும்.
இந்நிலையில், நிதி உதவி வழங்க முன்வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துக்கொண்டார்.