கான்சஸ்: அமெரிக்காவின் கென்சஸ் மாநிலத்தில் உள்ள விலங்கியல் தோட்டத்தில் சாவிக் கொத்தை விழுங்கிய நெருப்புக்கோழி மடிந்தது.
‘கெரன்’ என்று அழைக்கப்பட்ட அந்த ஐந்து வயது பெண் நெருப்புக்கோழி, அந்த விலங்கியல் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்லம் என்று தெரிவிக்கப்பட்டது.
எப்போதும் துருதுருவென, விளையாட்டுத்தனமாக இருந்த அந்த நெருப்புக்கோழியின் மரணம், விலங்கியல் தோட்ட ஊழியர்களை மட்டுமல்லாது, கான்சஸ் மாநில மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஓராண்டாக அந்த நெருப்புக்கோழி கான்சஸ் மாநிலத்தில் உள்ள டொபேக்கா விலங்கியல் தோட்டம் மற்றும் விலங்குப் பாதுகாப்பு மையத்தில் இருந்து வருவதாகவும் அதன் விளையாட்டுத்தனத்தால் அங்கு வந்தவர்களை மகிழ்வித்ததாகவும் விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், அதற்கு வைக்கப்பட்ட தடுப்பையும் மீறி வெளியே வந்த நெருப்புக்கோழி, விலங்கியல் தோட்ட ஊழியருக்குச் சொந்தமான சாவிக் கொத்தை விழுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
நெருப்புக்கோழியைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகம் கூறியது.
இந்தச் சோக நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக விலங்கியல் தோட்டம் சமூக ஊடகம் வாயிலாகத் தெரிவித்தது.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நிகழாதிருக்க புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அது கூறியது.